செவ்வாய், 14 மே, 2019

திருமந்திரம் உயிர்நிலையாமை


187 to #191


#187. தொழ அறியாதவர்
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.

பூங்கொம்பில் தழைக்கும் செந்தளிர்கள், மற்றும் அழகிய மலர்கள் போன்றவை. இவை அனைத்துமே சருகுகளாக மாறி விடும். இதைக் கண்ட பிறகும் கூட உயிர் உள்ளபோதே மக்கள் இறைவன் திருவடிகளைத் தொழுவதில்லை. எங்கனம் வணங்குவர்யமனிடமிருந்து அழைப்பு வந்த பிறகு?
#188. உடலை ஓம்ப வேண்டும்
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது,
ஐவருமச் செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகனோலை வருதலால்
ஐவருமச் செய்யைக் காவல்விட்டாரே.

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்ற ஐவர் தத்தம் தொழில்களைச் செய்வதற்கு அவர்களுக்கு விளை நிலமாக ஓர் உடல் கிடைத்தது. அந்த ஐவரும் அந்த உடலை நன்கு ஓம்புவார்கள் அதன் வினைப் பயன்களை அதற்கு ஊட்டி விடுவார்கள். இவர்களின் தலைவனாகிய சிவபெருமான் அந்த உடலின் வினை நுகர்வு முடிந்தவுடன் இறுதிச் சீட்டு அனுப்புவான்.அதன் பிறகு இந்த ஐவரும் அந்த உடலை ஓம்ப மாட்டார்கள்.
#189. கோவில் மண்ணாகி விடும்
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுஉள
அதுள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
அதுள்ளே வாழும் அரசம் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

மாயை என்ற மண்ணால் உருவாகிய உடல் ஒன்று உண்டு. அதில் உயிர்ப்பை நிறுத்தவும் விடுக்கவும் இரண்டு இடங்கள் உள்ளன. அந்த உடலில் பற்றுக் கொண்டு வாழும் ஜீவன் ஆகிய அரசன் அங்கு உள்ளான். ஆனால் அந்த அரசன் அந்த உடலை விட்டு நீங்கிய உடனேயே கோவில் போன்ற அந்த உடல் மீண்டும் மண்ணாக மாறி விடும்.
#190. வேதாந்தக் கூத்தன்
வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்கவல்லார் உயிர் தாம் அறியாரே.

சிரசின் மேல் ஈசான திசையில் விளங்குபவன் சிவன். வேதம் கூறும் வாக்கின் வடிவான பிரமமும் சிவன். வெந்து அழியும் இடலில் தீயாக இருப்பவனும் சிவன். தம் உடம்பாக சிவன் இருக்கும் உண்மையை அறியாதவர் உடலைத் தாங்கும் உயிரைப் பற்றியும் அறியாதவர் ஆவர்.
#191. அகங்காரத்தை வென்றவர்
சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இந்நிலத்தில் மனிதர்கள்
பொன்று உணர்வாரின் புணர்க்கின்ற மாயமே.

சிவன் என்னும் சூரியன் பத்து திசைகளிலும் சென்று அங்குள்ள அனைத்தையும் உணர்வான். சிவன் உணர்வு மயமாக விளங்குவான். உடலில் பரவியும் விரவியும் அனைத்தையும் உணர்கின்றான். இந்த உண்மையை உலகத்தவர் சற்றும் அறிவதில்லை. ‘நான்’ என்னும் அஹங்காரத்தை வென்று விட்ட ஞானியரிடம் சிவன் கலந்து விளங்கும் உண்மையையும் அவர்கள் அறியமாட்டார்கள்.



192 to # 196


#192. அழிந்துவிடும் தன்மை
மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.

நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே.
#193. வீணாள் ஆக்காதீர்கள்
துடுப்புஇடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்புஇடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்துஎரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.

சுழுமுனை என்னும் அகப்பை உள்ளது நம் உடலில். உடலாகிய பானைக்கு தகுந்த அரிசி ஆகும் விந்து. சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் சேர்ந்த அடுப்புக்குத் தகுந்த விறகுகள். உடலின் பஞ்சப் பிராணன்கள். இவற்றை வீணாக்காதீர்கள். விந்து சக்தியைத் தந்து விட்டு அமுதத்தைப் பெறுங்கள். நாட்களை வீணாக்காதீர்கள்!
துடுப்பு = அகப்பை => சுழுமுனை
பானை = > உடல்
அரிசி => விந்து
அடுப்பு => நாபி ஸ்த்தானம்
மூன்று => சூரியன் , சந்திரன், அக்னி
கொள்ளி => ஞானம் என்னும் தீ
அஞ்சு => பஞ்சப் பிராணன்கள்.

#194. புறம் நின்ற கருத்து
இன்புஉறு வண்டு அங்கு இனமலர் மேல்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புஉற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண் புறம் நின்ற கருத்துள் நில்லானே.

இன்பத்தைத் தேடும் வண்டுகளின் கூட்டம். பூக்களில் உள்ள சுவை மிக்க தேனை உண்ணும். அது போன்ற உயிர்களும் இன்பத்தையே நாடும். சோம சூர்யாக்னிகளின் ஒளியில் விளங்கும் நம் ஈசன் புறப் பொருட்களை நாடும் மனத்துள் விளங்க மாட்டான்.
#195. விதிகள் ஒன்றும் இல்லை
ஆம்விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதுஎன் சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமை வல்லார்க்கே.

இந்தப் பிறவியில் அறவழியில் நில்லுங்கள். இன்பம் தரும் நெறியில் ஒழுக்கத்துடன் இருங்கள். ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனைப் போற்றுங்கள். மனிதப் பிறவியை பெற்ற நற்பேறு உடையவர்களுக்குக் கூறுவதற்கு என்று வேறு என்ன விதிகள் உள்ளன?
#196. பகிர்ந்து உண்ணுங்கள்
அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது
தவ்விக் கொடு உண்ம்மின் தலைப்பட போதே.

வஞ்சனை, பொய், துன்பம் தரும் தீய சொற்களைப் பேசாதீர். அறநெறி கெடுமாறு தீய செயல்களைச் செய்யாதீர். பேராசை கொண்டு பிறர் பொருட்களைக் கவராதீர். சிறந்தவர்களாக நற்பண்புகளுடன் விளங்குங்கள். உண்ணும் பொழுது எவரேனும் வந்தால் அவர்களுக்கு ஓர் அகப்பை உணவு கொடுத்துவிட்டுப் பிறகு உண்ணுங்கள்.
(உயிர் நிலையாமை முற்றியது, அடுத்து வருவது கொல்லாமை)

புதன், 3 ஜனவரி, 2018

சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்


தேவராசா கஜீபன்
தமிழ் சிறப்புத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்


ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தி.ஞானசேகரன் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்துள்ளார். சிறுகதைகள் நாவல் என இவரது படைப்புக்கள் இன்றும் தமிழ் உலகில் நடை பயில்கின்றன.புன்னாலைக்கட்டுவானை பிறப்பிடமாகக்கொண்ட ஞானசேகரன் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபாடு கொண்டவராகவே திகழ்வதனை அவதானிக்கலாம். வைத்தியராக கடமையாற்றிய இவர் எழுத்தாற்றலும் கைவரப்பெற்றவராவார். சிறந்த படைப்புகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் இலக்கிய இதழான ஞானம் சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். சிறுகதை மூலம் எழுத்துலகில் கால் பதித்த இவர் புதியசுவடுகள், குருதிமலை, லயத்துச்சிறை ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். கலாபூசணம் என்ற அரச விருதினைப் பெற்றுள்ள ஞானசேகரனின் புதிய சுவடுகள் என்ற நாவல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்ற நூல் என்ற சிறப்பைக்கொண்டுள்ளது. 
புதி சுவடுகள் என்னும் நாவலானது யாழ்ப்பாணத்தில் நிகழும் சாதிப்பிரச்சினைகளைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. மண் வாசனை வீசும் தன்மையோடு யதார்த்த பூர்வமாக சிறந்த பாத்திர வார்ப்புக்களூடாக கதைகளை நகர்த்திச் செல்லும் பாங்கு ஞானசேகரனின் இந் நாவலின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்துள்ளன எனலாம். 60,70 காலப்பகுதிகளில் சாதிப்பிரச்சினை தொடர்பாகப் பேச எழுந்த நாவல்களுள் புதிய சுவடுகள் குறிப்பிடத்தக்க ஒரு நாவலாகும்.
இந்நாவல் சாதியில் குறைந்த சமுதாயப் பிரிவினனான மாணிக்கத்திற்கும் உயர்சாதி சமுதாயத்தை சேர்ந்த பார்வதிக்கும் இடையில் ஏற்படும் காதலையும் சமுதாய பிரச்சனை காரணமாக இருவரும் இணையமுடியாத சூழ்நிலை உருவாகுவதையும் இதனால் இருவரும் கந்தசாமி என்பவனின் துணைகொண்டு முத்தையன் கட்டிற்கு சென்று வாழ்வதனையும் காட்டுகிறார்;. இங்கு அவர்களின் காதல் உச்சம் பெற்று பார்வதி கருவுற்றுவிடுகிறாள். முத்தையன் கட்டிற்கு சென்ற துரைசிங்கம் முதலாளியும் பார்வதியின் தந்தை செல்லப்பரும் மாணிக்கனை அடித்துப் போட்டு விட்டு பார்வதியை தமது ஊருக்கு திரும்பவும் அழைத்து வருகின்றனர். மாணிக்கம் இறந்துவிட்டதாக கூறி பார்வதியை நடேசு என்ற அவளது மச்சானுக்கு திருமணம் முடித்துவைக்கின்றனர.; மாணிக்கத்தின் குழந்தையை காப்பாற்ற வேண்டும், இந்த கொடுமைத் தனமான சமுதாயத்தை தனக்கு பிறக்கவிருக்கும் மகன் மூலம் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். பிரசவவலி காரணமாக பார்வதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளது உடல்நிலை கவலைக்கிடமாகச் செல்கின்றது. மாணிக்கம் அனைத்துசெய்திகளையும் கேள்வியுற்று பார்வதியைக் காணவருகிறான். மாணிக்கத்தை நோக்கிய பார்வதி “இது உங்களுடைய சொத்து” என தன் குழந்தை மேல் மாணிக்கத்தின் கையை வைத்தபடி உயிர் விடுகிறாள். மாணிக்கத்தின் குழந்தை அந்த சமுதாயத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்ற கருத்தோடு நாவலாசிரியர் இந்நாவலைச் முடிப்பதைக் காணலாம்.
சில அடக்கு முறைகளை திணிப்பதன்மூலமும் அந்தஸ்தடிப்படையில் தம்மை உயர்;வாய் காட்டி சமூகத்தை கட்டியாள நினைக்கும் எந்த மனிதனையும் காலமானது புடம் போடும் என்பதே உண்மை. சாதி வெறி கொண்ட சமுதாய அமைப்புமுறையில் இருவேறுபட்ட சாதியினரிடையே காதல்என்பது உண்மையில் அந்த சமுதாய அமைப்பின் அடித்தளத்தையே அசைத்துவிடக்  கூடியது. அந்தவகையில் சாதிப்பிரச்சனைகளை பேசமுனைந்த தி.ஞானசேகரன் காதலை சாதி அடக்கு முறையாளர்களுக்கெதிரான ஆயுதமாகவே பயன்படுத்தியுள்ளார் எனலாம். பொருளாதாரம் எவ்வாறு அரசியல், சமய, சமூக காரணிகளை தீர்மானிக்கின்றனவோ  அதேபோலவே காதல் என்பது சாதிய சமுதாய அமைப்புக்களிடையே பெரும் மாற்றங்களை எற்படுத்தும் முக்கிய காரணியாக அமைகின்றது இது இன்றும் காணத்தக்கது. இது அன்றைய காலப்பகுதியிலேயே சமூகத்தில் வேர்விடத்தொடங்கியுள்ளமையை நாவலாசிரியர் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.
காலம் காலமாக மரபுவழிப்பட்டு நின்று பேணப்பட்டு வந்த ஓர் அம்சமே இவ் சாதிய அமைப்பு முறைகள் என்பர். இதன் அடிப்படையை இந்நாவலில் தரிசிக்க முடிவதனைக் காணலாம். உயர் சாதி சமுதாயத்தினருக்கு கீழ் தாம் கட்டுப்பட்டுஇருக்கத்தான் வேண்டும் என்பதனை கீழ்சாதி சமுதாய அமைப்பினர் ஏற்றுக்கொள்வதையும் அடங்கி நடப்பதையும் காணலாம். ஆயினும் அவற்றிற்கெதிராக சமுதாய மாற்றம் கருதி போராடும் இலட்சிய பாத்திரங்களையும் நாவலாசிரியர் காட்ட தவறவில்லை. சாதியத்தின் தாக்கம் பார்வதி என்னும் பாத்திரத்தில் ஏற்படுத்தும் உணர்வு நிலை போராட்டங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்து சித்தரிப்பதன் மூலம் இறுதியில் உயர்சாதி வரக்கத்தினர் முகங்களில் கரியினை பூசிவிடுகின்றார்  என்றே கூறவேண்டும்.
இதனடிப்படையில் 60,70ம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண சமுதாயம் முழுவதுமே இவ் சாதிப்பிரச்சினைகள் தலைதூக்கியிருந்தன என்பதே உண்மை இதை உணர்த்தவே ஆசிரியர் நாவலில் கதை நிகழ்ந்த களத்தை பொதுவாகவே சித்தரித்தார் போலும். ஆரம்பத்தில் எவ் ஊர் பெர்களையும் அவர் குறிப்பிட்டு இந்த ஊரிலே இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன எனக் கூறவில்லை. முழுவதுமாக யாழ்ப்பபாண சமுதாயத்தையே சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே யாழ் சமுதாயம் எங்கணும் சாதியம் தாண்டவமாடியுள்ளது என்பதே உண்மை. புதிய சுவடுகள் வெளிக்கொணர்கின்ற சாதிப்பிரச்சனைகளை அந்த நாவல் வழி நின்று அலசுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். புதிய சுவடுகள் வெளிப்படுத்தும் சாதியம் பற்றிய கருத்துக்களை பல கோணங்களில் தரிசிக்க முடிகின்றது.சாதியஅடக்குமுறை,சாதியஅடக்குமுறைகளுக்கெதிரானபேராட்டஉணர்வு,அடிமைத்தனம்,உயர்சாதிஅமைப்புக்களிடையே தளர்வுநிலை, சாதிப்பிரசினைகளால் ஏற்படும் விளைவுகள் என பல கருத்துக்களை ஒருமுக பார்வையுடன் நாவலில் தி.ஞானசேகரன் விதைத்துள்ளார் என்றே கருதமுடிகிறது. 2ம் உலகப்போரில் ஹிரோசிமா நாகசாகி நகரங்கள்மீது போடப்பட்ட அணுகுண்டுகளின்தாக்கம் இன்றும்அந்நிலங்களில்பரவியுள்ளதுபோலவே தி.ஞானசேகரன் அன்றுகண்ட சாதிப்பிரச்சனைகளின் மறுபிரதிகள்இன்றும் அதே யாழ்ப்பாண சமுதாயத்தினரிடையே வேரூன்றியுள்ளமையை காணமுடிகின்றது. எனவே இந்நாவலை முழுவதுமாக கற்பனையின் அடிநாதமாய் தோன்றிய ஓர் இலக்கியப் படைப்பு என்று கூறிவிட முயாது. யாழ்ப்பாண சமுதாயத்தின் உண்மையின் சாயல்கள் பல இடங்களிலும் பட்டுத்தெறிக்கின்ற தன்மை தி.ஞானசேகரனின் நாவல் பற்றிய புலமையையே பiறைசாற்றுகின்றது எனலாம்.
பார்வதிவீட்டிற்கு வந்த மாணிக்கம் தேனீர் அருந்துவதற்காக “எழுந்து சென்று சுவரின் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மூக்குப்பேணியை எடுத்து வந்து பார்வதியிடம் நீட்டினான்”; என ஆசிரியர் கூறுகின்றமை யாழ் சமுதாய அமைப்பினரிடையே இருந்த சாதியம் தொடர்பான அன்றைய நிலையினை எடுத்துக்காட்டுகின்றார். ஆயினும் இன்றைய காலப்பகுதியில் இவற்றின் தாக்கம் குறைவாகவே யாழ் சமுதாயத்தில் உள்ளது எனலாம் எனினும் இந் நாவல் தோன்றிய காலம் நின்று நோக்கில் இது யதார்த்தமே.
“ஏன்டா என்னோட எதிர்த்தோட கதைக்கிறாய் என்னடா நீ அவ்வளவுதூரத்திற்கு வளர்ந்திட்டியோ”…“ஒரு கீழ் சாதி பயலுக்கு இவ்வளவுதுணிவு வந்திட்டுதோ” என்ற துரைசிங்கம் முதலாளியின் வார்த்தைகளும் “எடியேய் எளிய சாதிக்காரன் கடிச்சுப்போட்டு குடுத்த மாங்காயை ஏனடி சாப்பிட்டனி இனிமேல் அவனோட சேர்ந்து பள்ளிக்கூடம் போப்படாது” என பார்வதியை நோக்கி செல்லப்பர் கூறுகின்றமையும் கீழ்சாதிக்காரரை தங்களுக்கு கீழாகவே எப்பவும் நடத்த வேண்டும் என்ற கருத்தியல் மேல்சாதிக்காரரிடையே  நிலவுவதையும் உயர் சாதியினரிடையே காணப்படும் வரட்டு கௌரவங்களையும் எடுத்துகாட்டுவனவாகவே அமைகின்றன.“என்ன பொன்னி இப்பகொஞ்சகாலமாய் நீ என்னைக் கவனிக்கிறதில்லை…”“என்னடி ஒண்டும் விளங்காத மாதிரி கேட்கிறாய்எனக்கூறி தள்ளாடியபடி எழுந்து செல்லப்பர் அவளது கைகளைப்பற்றினார்”; என்பதும் “இல்லை கமக்காரன் இனி மாணிக்கம் வந்திடுவான் நீங்கள் வீட்டுக்கு போங்கோ”எனப்பதற்றத்தடன் அவரது பிடியிலிருந்து தன்னை விலக்கினாள். என்பதும் “கமக்காரனுக்கு இப்பவும் இளமைத்துடிப்பு குறையேல்லை” என தனக்கு தானேகூறி சிரித்துக்கொண்டாள்; என்பதும் கவனிக்கத்தக்கது. உயர் சாதியை சார்ந்தவர்கள் கீழ் சாதிப்பெண்களுடன் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதும் சிலசமயங்களில் அப்பெண்களும் இசைந்து நடந்திருக்கின்றமையையும் இந்நாவலூடே காணமுடிகிறது. சாதாரணமாக ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற உணர்வு நிலைப்பாட்டால் உருவாகிய தவறா? அல்லது அவள் கீழ்ச் சாதிப்பெண் என்பதினாலேயே அவள் மீது செல்லப்பர் தனது காம இச்சையை ஒரு போது தீர்த்துக்கொண்டாரா?என்பது சிந்திக்கத்தக்கதே!
சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராக போராடுகின்ற பாத்திரங்களாக பல இடங்களில் மாணிக்கமும் சில இடங்களில் பார்வதியும் ஆசிரியரால் உலாவ விடப்பட்டள்ளமையைக் காணலாம். மாணிக்கம் பாடசாலைக் கிணற்றில் கொடி பிடித்து தண்ணீர் அள்ளி பருகியதற்காக தலைமை ஆசிரியரிடம் அடிவாங்குவதும் “ஆனால் அவன் அப்போது அழவில்லை” என ஆசிரியர் கூறுவதும் “தனக்கு தண்ணீர் அள்ளிகொடுக்க மறுத்தவதர்களை பழிதீர்த்துவிட்ட திருப்தியுடன் அலட்சியத்துடன் வீரதீரச் செயல் புரிந்துவிட்டதாக அவன் எண்ணினான் எனக்கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு மாணவர்கள் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கவேண்டிய ஆசிரியரே சாதிபார்த்து பாடசாலையில் தண்டனை வழங்குவதையும் ஒருவிதத்தில் பாடசாலைகள் கூட சாதிய செல்வாக்கிலேயே இயங்கியுள்ளன என சிந்திக்க தூண்டுவதோடு மேன்நிலைசார் சமூகத்தவரின் அடக்குமுறைகளுக்கெதிராக பழிவாங்க வேண்டும் என்ற உணர்வுநிலை கீழ் சாதியை சேர்ந்த பாடசாலைச்சிறுவன் முதற்கொண்;டேஅச்சமுதாயத்தில் இருந்துள்ளது என்பதனையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
“என்னடா நான் கூப்பிட கூப்பிட பேசாமல்போறாய் என்ன காது அடைச்சுப்போச்சோ உன்ர கொப்பன் கோவிந்தன் எங்க போட்டான்” என துரைசிங்கம் முதலாளி கேட்க அவர் கேட்டவிதம் மாணிக்கனுக்கு ஆத்திரமூட்டுவதாகவே இருந்த போதும் “அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பதில் சென்னான்” என ஆசிரியர்கூறுவது சாதிய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழத் துடிக்கும் மனதினை உடையவனாக மாணிக்கம் இருப்பதனையும் இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் பதில்சொல்வதையும் காட்டுகின்றது. “ஆச்சி எங்களுக்கு காணியில்லை என்ட படியால் தானே அடிமைச் சீவியம் செய்யவேண்டியிருக்கு”என மாணிக்கம் பொன்னியை நோக்கி கேட்பதிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களுக்கென்று சொந்தமாக அன்றய நிலையில் யாழ் சமுதாயத்தில் காணிகள் இருக்கவில்லை என்பதும் அவர்களது அடிமைத்தன வாழ்க்கைக்கான காரணமும் வெளிப்பட்டு நிற்றலை அவதானிக்கமுடிகின்றது.
“டேய் அவர் ஏதேன் வேலைசொன்னால் செய்து கொடுக்கத்தானே வேணும்…”“பொத்தடா வாயை உனக்கு நாக்கு நீண்டுபோச்சு எங்கட அப்பன் பாட்டன் காலத்திலிருந்து நாங்கள் கமக்காரர் சொன்ன வேலையை செய்துகொண்டு தானே வாறம் நீயெல்லோ புதுசு புதுசாய் கதைக்கிறாய்.  உன்னை படிக்க வைச்சதுதான் பிழையாய் போச்சு”என கோவிந்தன் மாணிக்கனைப் பார்த்து கூறுவதிலிருந்து காலம் காலமாக கீழ் சாதிக்கார மக்கள் உயர்சாதியினர் மத்தியில் அடிமைகளாகவே இருந்துள்ளனர் என்பதனையும் அம்முறைமையை கீழ்ச்சாதிமக்கள் தாமாகவே ஏற்றுநடந்தமையையும் கல்வியறிவற்ற சமுதாயமாகவே வாழ்ந்தார்கள் என்பதனையும் காட்டுவதாகவே அமைகின்றது. பழமையான சமுதாய அமைப்பிலிருந்து புதிய சமுதாயத்தை வேண்டி நிற்கும் ஆசிரியரது எதிர்பார்ப்பு மாணிக்கம் என்ற பாத்திரம் ஊடாக கூறப்படுவதைக்காணலாம்.பழமையான அடிமைத்தனங்களில் இருந்து விடுபடத் துடிப்பவனாகவும் கல்விகற்றவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான்.
“கிணத்துக்க விழுந்தவனை தூக்க இவன் மாணிக்கத்தை தவிர உங்கவேற ஒருத்தனும் இல்லையோ கொடி பிடித்து கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாதவன் கிணத்துக்க குதிச்செல்லோ தூக்கியிருக்கிறான்” என கூறுவதும் அதற்கு பதிலாக மாணிக்கம் “கிணத்துக்கவிழுந்தவளைகாப்பாத்த ஒருத்தருக்கும் நெஞ்சு துணிவில்லை இப்ப நியாயம் பேசினம்” என கூறுவதும் உயர் சாதி வேளாளர்களது கீழ் சாதி மக்கள் தொடர்பாக இருக்கும் கருத்து நிலையைப் புலப்படுத்துவதோடு மாணிக்கனது கொந்தளிக்கும் மன உணர்வினையும் வெளிக்காட்டி நிற்கின்றமையையும் காணலாம்.“அவங்களை வைக்க வேண்டிய இடத்தில தான் வைக்கணும் இல்லாவிட்டால் தலையிலை ஏறிடுவாங்கள் அவன் மாணிக்கத்துக்கு இந்தவீட்டில கூடினஉரிமை இருக்கிறதாலதான் அவன்ஒருவேளாளரையும்மதிக்கிறானில்லை” என துரைசிங்கம் முதலாளி கூறுவதும் உயர்சாதியினரின் அடக்கு முறையின் சாயலையே காட்டுகிறது. அத்தோடு “நாங்கள் எங்களுடைய ஒற்றுமையை காட்டுறதெண்டால் ஊரில இருக்கிற கீழ்ச்சாதி குடும்பங்கள் எல்லாத்தையும் குடியெழுப்பவேணும் அவங்கள் தோட்டம் செய்யிற குத்தகை காணியளை பறிக்க வேணும், கள்ளுச்சீவிற பனையளை நிப்பாட்ட வேணும்” என துரைசிங்கம் முதலாளி கூறுவதிலிருந்தும் தகழ்த்தப்பட்ட சாதிக்கார மக்களது வாழ்க்கை நிலை முதலைவாயில் அகப்பட்ட மீனாக முழுமையாக உயர்சாதியினரின் கைகளிலேயே தங்கியிருந்தமையை புலப்படுத்துகின்றன்றது. குடியிருக்கின்ற காணியிலிருந்து தோட்டம் செய்கின்ற குத்தகை நிலங்களில் இருந்து கள்ளுச்சீவும் பனைமரம் வரை அனைத்துமே வேளாளர் சொத்துக்களாகவே இருந்துள்ளமையும் கீழ் சாதி மக்களது அடிமைநிலை வாழ்வுக்கு காரணங்களாய் அமைந்தன எனலாம்.
முத்தையன் கட்டிலிருந்து செல்லப்பர் பார்வதியை கூட்டி வந்தபின்பு செல்லப்பரின் நிலை அவமானத்தின் உச்சிக்கு சென்று கோபத்தை கொப்பளிக்கிறது பார்வதியை எட்டி உதைவதும் அவளை பேசுவதுமாக செல்லப்பர் காட்டப்படுவதும் உயர்சாதி குடும்பங்களில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஏற்படக் கூடிய உண்மை நிலையினையே எடுத்துக்காட்டுகின்றது. “கீழ்ச்சாதிக்காரன்கூட்டிக் கொண்டு போன பெட்டையை ஒருவன் கூட்டிக் கொண்டு வரலாம் என்றால்  கீழ் சாதிக்காரனும் சபைக்கு வரலாம்தானே” என்றகேள்விகள் உயர்சாதிகளுக்குள்ளேயே பிரிவினைகள்இடம்பெறுவதைக்காட்டுகிறது.உயர்சாதியினரேதம்சாதியினரைஅவமானப்படுத்துவதையும் காணமுடிகின்றது இதுவும் யதார்த்தமே. சமசாதிக்காரனே அவமானப்படுத்துவதோடு கீழ்சாதிக்காரன் கூட்டிக்கொண்டு போன காரணத்தால் பார்வதியை தன்னுடனும் வருமாறு அம்பலவாணர் அவளை கேவலப்படுத்துகிற தன்மை உயர்சாதியினரது கீழ்த்தரமான எண்ணங்களையும் உயர்சாதியை சார்ந்த பெண் கீழச்;சாதிக்காரனை காதலித்தால் அவளது நிலை என்ன என்பதனையும் காட்டுகின்றது.
“மாணிக்கத்திடமிருந்து தன்னை பிரித்தெடுத்த மூடத்தனமான சமுதாய அமைப்புக்கு தனது வயிற்றில் வளரும் சிசு ஒரு சவாலாக அமைய வேண்டும் எனப்பார்வதி வைராக்கியம் கொண்டாள்” என ஆசிரியர் கூறுவதும்
“மாணிக்கம் விட்டுசென்ற அவரது சொத்து இந்த சமூகத்திலிருந்து எல்லோரையும் பழிவாங்க வேண்டும்” என அவள் எண்ணுவதும் ஆசிரியர் தான் கூறமுற்பட்ட சமுதாய மாற்றத்தை பார்வதி என்ற உயர்சாதி பெண் மூலமாகவே எடுத்துக் கூறுகின்ற தன்மையை காட்டுகிறது எனலாம். இந்த வகையில் ஒட்டுமொத்தமாக உயர்சாதியை சேர்ந்த அனைவரையும் ஆசிரியர் குறை கூறவிரும்பவில்லையாயினும் கீழ்சாதியினருக்கெதிராக எங்கெல்லாம் அடக்கு முறைகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் குரல் கொடுக்க முனைந்துள்ளார் என்றே கூறவேண்டும்.
“இல்லையண்ணை நான் வெளியிடங்களுக்கு போகேக்கை அவன்தான் இங்கைஇவையளுக்கு உதவியாய் இருக்கிறவன் அதுக்காகத்தான் இங்க வந்து போறவன்” என மாணிக்கம் பற்றி செல்லப்பர் துரைசிங்கத்திடம் கூறுவதும் “ஆபத்து நேரத்தில் உதுகளை பாக்கமுடியுமோ அவன் தூக்கினதால இப்பென்ன அவளிலை ஏதோ ஒட்டிப்போச்சோ” என சின்னத்தங்கம் கேட்பதும் உயர்சாதியினரிடையே சாதி தளர்வு நிலை காணப்படுவதைக் காட்டுவதாக அமைகிறது.
“இவங்களோட பகைத்தால் கூலி வேலைக்கு உங்களுக்கு ஆள் கிடையாது நீங்கள் தான் பனையில ஏறி கள்ளு சீவவேண்டிவரும் உங்கட தோட்டம் துரவைப் பாக்கவும் ஆக்களில்லாமல் போகும்” என பொன்னம்பலவாத்தியார் கூறுவதிலிருந்து உயர்சாதி வேளாளர் வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் முக்கியத்துவம் எவ்வாறு இருந்தது என்பதனை ஆசிரியர் உணர்த்த முற்படுவதனை காணமுடிகிறது. மேலும் “இதெல்லாம் சின்னத்தம்பர் காலமாற்றத்தில நடக்கத்தான் செய்யும் அதையாரும் தடுக்கமுடியாது ஆனால் எந்த சூழ்நிலையிலையும் நாங்கள் எங்கட நிதானத்தை இழக்கப்படாது. தனிப்பட்ட ஒருத்தன்ர விசயத்திற்காக ஒரு சமூகத்தை பழிவாங்கப்பிடாது. என சாதிவெறிபிடித்த உயர்சாதி வர்க்கத்திற்கு ஆசிரியர் தன்னிலை நின்று பொன்னம்பலவாத்தியார் மூலமாக அறிவுரை கூற முற்படுகின்றார் என்றே கூறலாம்.
“கோவிந்தன் நாலு பனைஏறி இறங்கிய பின் உச்சி வெயிலில் நின்று தோட்டம் கொத்திவிட்டு வந்ததினால் ஏற்பட்ட களைப்பு” என கூறுவதும் கோவிந்தன் மாணிக்கனை நேக்கி “சும்மா சுத்திதிரியாமல் இரண்டு மரத்தில கள்ளுச்சீவலாம் தோட்டத்தை கொத்தலாம” என கூறுவதும்“நீ போ மச்சான் எனக்கு இன்னும் இரண்டு பனை இருக்கு நேரத்தோட சீவிப்பேட்டுவாறன்” என குட்டியன் கூறுவதும் பள்ளர் எனும் சமுதாயப் பிரிவினரின் தொழில்களை வெளிக்காட்டி நிற்பதோடு முட்டி,பிளா,கள்ளு,பாளைக்கத்தி போன்ற சொல்லாடல்களும் அவர்களது சமுதாயப்பிரிவினை பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளமையை காணலாம். ஆயினும் எந்த ஒரு இடத்திலும் ஆசிரியர் பள்ளர் என்ற சொல்லை பிரயோகிக்க விரும்பியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இங்கு கூறப்படுகின்ற கீழ்ச்சாதி என்ற சமுதாயத்தினர் பள்ளர்  சமுதாயப் பிரிவினரே என்பது ஆசிரியரது சொல்லாடல்களிலிருந்து புரிந்து கொயள்ளத்தக்கது.
துரைசிங்கம் முதலாளி தனது மகளின் திருமணத்தின் பொருட்டு காணியினை கோவிந்தனுக்கு விற்க முன்வருவதும் முன்பு எதிர்ப்புக்கள் பலதை முன்வைத்த சின்னத்தம்பர் “பாவம் செல்லப்பர் அநியாயமாக பார்வதியை சாககுடுத்திட்டு இருக்கிறார் அவளை மாணிக்கனோடையே வாழ விட்டிருக்கலாம்” எனக் கூறுவதும் மாணிக்கனது குழந்தையை சமுதாயம் ஏற்றுகொள்வதும் ஆசிரியரின் இலக்கை ஆசிரியர் எட்டி விட்டதன்மையையே வெளிக்காட்டுகிறது எனலாம்.
எனவே மண்வாசனையோடு யதார்த்த பூர்வமாக புதிய சுவடுகள் உருவாக்கம் பெற்றுள்ளது. சாதியப் பிரச்சனைகளால் தோன்றும் மன உணர்வு நிலைப்பட்ட போராட்டங்களையும் சாதிகள் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களையும் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிகவும் சிறப்பான முறையில் இந்நாவல் புலப்படுத்துகிறது.

இந்த இணைப்பிலும் வாசிக்கலாம்....

வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலை

E-mailPrintPDF
நூல் அறிமுகம்: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலைதே.கஜீபன்




முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.

இந்நாவலின் கதைச்சுருக்கத்தை நோக்கின் கதிராமனும் கற்பகமும் திருமணம் செய்து கொள்கின்றனர். கதிராமனது அண்ணி அனைத்து பாத்திரங்களுக்கும் எதிர்ப்பாத்திரமாகக் காணப்படுவதோடு கற்பகத்தை வீட்டைவிட்டு துரத்த தன் கணவனுடன் இணைத்து சந்தேகப்பட்டம் கட்டுகிறாள். அதனை யாருக்கும் வெளிப்படுத்தாது கணவன் கதிராமனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கற்பகம் சிறிதுகாலம் தன் தாய் தந்தையருடன் இருந்துவிட்டு தனிக்குடித்தனம்  போகிறார்கள். கதிராமனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அக்குடும்பத்தினர் பெரும் வறுமைக்கு உட்படுகின்றனர். சீதனம் மூலமாக கதிராமனுக்கு கிடைத்த கமுகஞ்சோலை நல்ல விளைச்சலைக் கொடுத்ததால் குடும்பம் செழிப்பாகவே இருந்தது. தனது மாமா, மாமியின் நிலையினைக் கேள்வியுற்ற கற்பகம் வண்டி நிறையப் பொருட்களோடு அவர்களுக்கு உதவுவதற்காகச் செல்கிறாள். மறைந்து போன சந்தோசம் மீண்டும் அக்குடும்பத்தினரிடம் துளிர்விடுகின்றது.

இதற்கிடையில் கற்பகத்தின் திருமணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் செந்தில் என்பவனிடம் அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவன் ஆசை வார்த்தைகளைக் கூறி பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவன். அவனது குழந்தை கமலத்தின் வயிற்றில் வளர்வதை அறிந்த கற்பகம் தன்னை காத்துக் கொண்டதோடு அவனை அவமதித்தாள். இவ் அவமானத்திற்கு பழிதீர்க்க எண்ணிய செந்தில் கற்பகத்தை கடத்துவதற்கும், திருமணத்தை குழப்புவதற்கும் போட்ட சூழ்ச்சிகள் எவையும் நிறைவேறாமல் போகவே நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிரமமாக இருப்பதோடு ஆங்கிலேயர்களுக்கு அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை எனவும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கதிராமனின் கமுகஞ்சோலையை அழிப்பதற்கான சூழ்ச்சியை மேற்கொள்கின்றான். அதிகாரியின் கட்டளை கிடைத்தததும் கமுகஞ்சோலை அழிக்கப்படுகின்றது. மக்கள் எவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களது முயற்சி பயனின்றியே போனது. ஆனால் செந்தில் ஒரு பைத்தியக்காரியின் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரை விடுகின்றான். அவள்தான் இவனால் ஏமாற்றப்பட்ட கமலம். கதிராமன் பழுத்த பாக்குகளை அள்ளிக்கொண்டு ஏதோ ஒரு காலத்தில் அவற்றை பயிரிடப்போவதாக கூறிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறாக இந்நாவலின் கதை அமைந்து விடுகின்றது.
மக்களிடம் பயிலப்பட்டு வந்த “கமுகஞ்சண்டை” என்னும் கதைப்பாடலை அடிப்படையாகக் கொண்டே இந்நாவல் எழுதப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் இக்கதையின் மையக் கருத்தாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் மக்கள் எவ்வாறு அடக்கியாளப்பட்டார்கள். சமுதாயத்தின் பண்பாட்டு பாரம்பரியங்கள் எவ்வாறு  காணப்பட்டன போன்ற விடையங்கள் அமைந்துள்ளன. இந்தவகையில் “கமுகஞ்சண்டை” என்ற பாடலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட இந்நாவல் “கமுகஞ்சோலை” என்ற தலைப்பைக் கொண்டு அமைந்துள்ளமை மிகவும் பொருத்தமுடையதாகவே காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் தோன்றிய நாவல்கள் தனிமனித கொள்கைகளையும் யதார்த்த வாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றன. புனைகதை என்ற வடிவத்தின் ஆதாரமாக யதார்த்தவாதமே விளங்கியது. இவ்வகையில் ஈழத்து ஆரம்பகால நாவல்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் உலகில் இலக்கியதுறையின் வளர்ச்சியும் மனிதனது சிற்தனையாற்றலும் இணைந்து காலப்போக்கில் பல பரிணாமங்களைப் பெற்றுக் கொண்டன. அந்த வகையில் காதல், மர்மம், சார் நாவல்கள் பலவும் யதார்த்த பண்பை விடுத்து கற்பனையின் உச்சத்தை தொட்டு அமையப்பெற்றாலும் சமூகம், வரலாறு, தலித்தியம், பெண்ணியம் சார் நாவல்கள்  யதார்த்தத் தன்மையோடு அமையப்பெற்றன. அதனடிப்படையில் கலாநிதி முல்லைமணியினுடைய கமுங்கஞ்சோலையும் நாவல் ஒன்றிற்குதேவையான யதார்த்தப்பண்புகளை கொண்டு அமையப்பெற்றுள்ளமையைக் காணலாம்.

பொருளுடைமையாளர்களாக காணப்படும் மேல்த்தட்டு வர்க்க மக்கள் தங்களது செல்வாக்குகளின் காரணமாக தமக்குக் கீழ் காணப்படுகின்ற மக்களை ஏதோ ஒருவகையில் ஆளமுற்படுவதும் அவர்களது துன்பங்களுக்கு காரணமாக அமைவதும் வாழ்வின் உண்மைத்தன்மையே. இதனையே செந்தில் என்ற பாத்திரம் மூலமாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். பல பெண்களை காதலிப்பதும் ஆசை வார்த்தை காட்டி அவர்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதும், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் வயிற்றில் குழந்தையுடன் சமூகத்தில் வாழமுடியாமல் தற்கொலையை வாழ்வின் முடிவாக்கிக் கொள்வதும், அவர்களிலும் ஒரு சிலர் இலட்சிய வாதிகளாக வாழ்ந்து சம்பந்தப்பட்ட ஆண்களை பழி தீர்த்து கொள்வதும், பைத்தியங்களாக தம் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பகட்டுப் பேச்சுகளுக்கும் பொய்க் காதல்களுக்கும் மயங்கி வாழ்வை நாசமாக்கி வாழும் பெண்களும் காணப்படுகின்றனர். இதனையே ஆசிரியர் செந்தில், கமலா, கற்பகம் என்ற பாத்திரங்களினுடாக எடுத்துரைக்கின்றார். இவ்வாறான சம்பவங்கள் நாவல் எழுந்த காலச் சூழலில் மட்டுமன்றி தற்காலத்திலும் நம் சமூகங்களிடையே நடக்காமலில்லை.
கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை என்பது நம் முன்னோர்கள் காலந்தொட்டு தமிழ் மரபில் பேணப்பட்டு வந்த ஒன்றாகும். இவ்வாழ்வியல் முறையில் அனைவரும் ஒரேமாதிரியான சிந்தனையாற்றல் கொண்டவர்களாகவும் ஒரே இயல்புள்ளவர்களாகவும் இருப்பதில்லை. அவரவர் மனநிலைகளுக்கேற்ப அவர்களது செயற்பாடுகள் அமைந்துவிடுவது இயல்பானதே. இதனைக் கைலைவாசம் என்ற குடும்பத்திலுள்ள பாத்திரங்கள் மூலமாக மிகவும் சுலபமாக ஆசிரியர் கூறிவிடுவதனைக் காணலாம். பவளத்தம்மாள் போன்ற இயல்புடையவர்கள் இன்றைய சமுதாயத்திலும் வாழத்தான் செய்கின்றார்கள். ஆனாலும் பொருளாதாரமும், நவீன மோகங்களும் இன்றைய நிலையில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துத்தான் விட்டுள்ளன. தனிக்குடித்தனமும், வெளிநாட்டு வாழ்க்கையும் நமது சமூகத்தவர் மத்தியில் பெருகிக்கொண்டு வருகின்றமை நமது மரபார்ந்த பண்பாட்டுக் கோலங்களைச் சற்று அசைக்கத்தான் செய்கின்றன.

வன்னிச் சமுதாயத்தினுடைய நாட்டுப்புறவியல் சார் பண்பாட்டம்சங்கள் இந்நாவல் மூலம் வெளிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டாரியல் வாழ்வியல் அம்சங்கள் ஒரு சமூகத்தின் வரலாற்று எழுதுகைக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. அந்த வகையில் இந் நாவலிலும் இதனைத் தரிசிக்க முடிகின்றது. சமூகத்தில் பேணப்பட்டு வந்த மரபுக்கதைகளை ஆசிரியர் நாவலிலே சித்தரித்துள்ளார். இதனை “வன்னியரசர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய குமாரபுரம் சித்திரவேலாயுதர் கோயில் அற்புதமான சித்திர, சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்ததாகவும் இது போன்ற அழகிய சிற்பங்களை வேறெந்தக் கோயிலுக்கும் செய்யக் கூடாதென்று நினைத்து சிற்பியின் கையையே வன்னியரசன் வெட்டிவிட்டதாகவும் பறங்கியர் சைவ ஆலயங்களை இடித்து வருகின்றனர் என்பதை அறிந்த ஆலயக்குருக்கள் மூலஸ்தான விக்கிரகத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு கடல்மார்க்கமாக யாழ்ப்பாணம் சென்று கந்தவனக் கடவையில் பிரதிஸ்டை செய்ததாகவும்” கூறப்படுகின்றது. இது ஒரு மரபுக்கதையாகக் காணப்பட்டாலும் வன்னித்தமிழர்களது கலைகள் தொடர்பான திறன்களையும் மக்கள் இந்துப்பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலும் பேணிப்பாதுகாப்பதிலும் முயற்சியுடையோராய் விளங்கினர் என்பதனையும் பறைசாற்றுவதாகவே அமைகின்றது. மேலும் புராண இதிகாசச் சம்பவக்குறிப்புக்களும் இந் நாவலில் காணப்படுகின்றது. “பரதனை நாடாளவிட்டு சடைமுடிதரித்து பதின்னான்கு ஆண்டுகள் காட்டில் போய் வசிக்கும்படி அரசன் கட்டளையிட்டதாக கைகேயி சொன்னாளாம்” என்பதுபோல நாச்சியம்மாள் மாமியின் கட்டளையை பவளத்தம்மாளிடம் கூறுவதாக ஆசிரியர் கூறுகின்றார். ஆசிரியர் கதையோட்டத்திற்கேற்ப உதாரணமாகக் கூறினாலும் இவை இந்து மதம் தொடர்பான புராணக் கதை மரபுகள் மக்களிடையே பயின்று வந்திருப்பதைக் காட்டுவதாய் அமைகின்றன.

நாட்டாரியல் வகைகளுள் ஒன்றான பழமொழிகளின் பயன்பாடும் இந்நாவலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமையைக் காணலாம். இதனடிப்படையில் வன்னிமக்களிடையே பயன்பாட்டில் இருந்த பழமொழிகளாக, தானாடாவிட்டாலும் சதையாடும், உலைமூடியால் மூடமுடியாது, முதல்க்கோணல் முற்றும் கோணல், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், பிள்ளையார் பிடிக்க குரங்காகியது போல, தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான், காலம்மாறக் கருத்தும் மாறும், உழுகிற நேரம் ஊர்வழி போனால்  அறுக்கிறநேரம் ஆள் வேண்டாம், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை, பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு, வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையில்லை, எலிப்பாளி எண்டாலும் தனிப்பாளி வேண்டும், போன்ற பழமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் அம்சங்களை பழமொழிகள் பிரதிபலிக்கவல்லன. கதையோட்டத்தின் நகர்விற்கேற்ப ஆசிரியர் பழமொழிகளைக் கையாண்டாலும் அவை அச்சமூகத்தில் பயின்று வந்தனவேயன்றி வேறானவையல்ல.

வன்னிவாழ் மக்களது தொழில் முறைகள், உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் இந்நாவல் பேசுகின்றமையைக் காணமுடிகின்றது. வேட்டையாடுதல், விவசாயம் செய்தல், கள்ளுச்சீவுதல், பாக்குப் பயிர்ச்செய்கை பண்ணல், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், போன்றன அக்கால மக்களின் தொழிலாகக் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சமுதாயப்பிரிவினர் வன்னிச்சமுதாயத்தில் காணப்பட்டனர் என்பது தெளிவாகின்றது. பனாட்டு, தயிர், கானாந்தி வறை, பால்ச்சொதி, நெய், கத்தரிக்காய்த் தீயல், முசுட்டை வறை, வாழைக்காய் பொரியல், திப்பிலிக்கொச்சிக்காய் போன்றன உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டதோடு உடும்பு, மான், மரை, உக்கிளான், முயல், காட்டுக்கோழி, றால் போன்ற மச்ச மாமிசங்களையும் உணவாக உட்கொண்டுள்ளனர். பண்டிகைக் காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும், விசேடதினங்களிலும் பயிற்றம் பணியாரம், அரியதரம், முறுக்கு, சிப்பி போன்ற பலகார வகைகளை உட்கொண்டதோடு மா, பலா, வாழை முதலான பழவகைகளையும் உணவின் பின் உட்கொண்டுள்ளனர். கற்கண்டு போட்டுக்காய்ச்சிய பாலையும் அக்கால மக்கள் பருகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய காலத்தில் இவற்றில் சில உணவுப்பழக்க வழக்கங்கள் அருகிக்காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.      

வன்னித் தமிழரின் சடங்குகள், சம்பிரதாயங்கள் தொடர்பாகவும் ஆசிரியர் கூறத்தவறவில்லை. திருமணம், சீதனமுறமை, சித்திரைவருடப்பிறப்பு, போன்ற பண்டிகைகள், சடங்கு சார் நிகழ்வுகள் என்பவற்றையும் மக்கள் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். சாத்திர முறைகளிலும் நம்பிக்கை உள்ளவர்களாகக் காணப்பட்டதோடு கடவுள் நம்பிக்கை மிக்கவர்களாகவும் காணப்பட்டுள்ளமையையும் இந் நாவலூடே அறியமுடிகின்றது. கசம், பிளவை போன்ற நோய்கள் தொடர்பாகவும் சித்தமருத்துவ முறைகள் தொடர்பான அறிவினைக் கொண்டவர்களாகவும் அக்கால மக்கள் காணப்பட்டுள்ளனர். கடுக்காய் பேதிமருந்து, வேர்க்கொம்பு, பனங்கட்டித்தண்ணி, கொத்தமல்லி, சித்தமட்டி, பேரமட்டி, ஆடாதோடை, தேன், போன்றவற்றின் மருத்துவக் குணம் அறிந்து மக்கள் அவற்றினை மருந்துகளாகப் பயன்படுத்தி உள்ளமைமையை நாவல் காட்டுகிறது. இன்றும் வன்னிவாழ் மக்களிடையே சித்த மருத்துவ முறமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூத்து முறமைகளிலும் ஈடுபாடுள்ளவர்களாக அக்கால மக்கள் காணப்பட்டுள்ளனர். மகுடிக்கூத்து அக்கால மக்களிடையே ஆடப்பட்டு வந்துள்ளது. மகுடிக்கூத்து இரண்டு குழுவினரிடையே முரண்பாடுகள்  ஏற்படுவதையும் அவர்கள் தங்கள் தங்கள் மந்திர சக்திகளைப் பயன்படுத்துவதையுமே உட்பொருளாகக் கொண்டு அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இக் கூத்தின் மூலம் இஸ்லாமிய, இந்து சமயங்கள் சார் சடங்குமுறைகள் வெளிப்பட்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அக்காலப்பகுதியிலே இந்து, முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளமையினையும் நாவலூடாகத் தரிசிக்க முடிகிறது. சுல்தான் கண்டுவும், காதறுசாய்பும் கதிர்வேலனுடன் வேட்டைக்குச் செல்வதும், கிடைத்த இறச்சியைச் சமனாகப்பங்கிடுவதும்,  ஒன்றாக அமர்ந்து வெற்றிலை போடுவதும், கமுகமரங்கள் தறிக்கப்படும் போது ஒன்றாகச்சேர்ந்து போராடுவதும் இந்நாவல் காட்டிநிற்கும் இன ஒற்றுமைக்குச் சான்றாக அமைகின்றன. அத்தோடு “வேட்டைக்காரர் போகுமுன் மான் இறந்துவிட்டால் அதன் இறச்சியை முஸ்லீம் மக்கள் உண்ணமாட்டார்கள்” என ஆசிரியர் கூறுவதானது முஸ்லீம் மக்கள் கொண்டிருந்த உணவுப்பழக்கம் தொடர்பான கொள்கையினை எடுத்துக் காட்டுவதாய் அமைகின்றது.

நாவல் காட்டும் மக்களிடையே கல்வியறிவென்பது அதிகம் இருக்கவில்லை எனினும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் அரச உத்தியோகம் செய்ய வேண்டுமானால் அரைகுறையாகவாவது ஆங்கிலம் கற்றிருக்க வேண்டிய தேவை இருந்தது. அக்காலத்தில் அனைவரும் கல்வி கற்றிருந்தார்கள் என்பதற்கில்லை. எனினும் திண்ணைமரபுக் கல்வி முறமை இங்கு காணப்பட்டுள்ளதோடு. பனையோலையில் எழுதும் மரபும் காணப்பட்டுள்ளது. நாணயப் புழக்கங்கள் மக்கள் மத்தியில் நிலவியதோடு அக்காலத்தில் அவை சதக்கணக்கு பெறுமதியானதாக அமைந்திருந்தன. அக்கால மக்களிடையே அவை பெறுமதியானவையாகவே கருதப்பட்டன என்பது மறுப்பதற்கில்லை.

வன்னி வாழ் மக்களிடையே அக்காலத்தில் பல விளையாட்டுக்களும் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாகக் இருந்துள்ளதை இந் நாவலூடே காணமுடிகிறது. கிளித்தட்டு, பாக்குக்கட்டும் போட்டி, போர்த்தேங்காய், ஊஞ்சலாடல் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அத்தோடு விளையாட்டுப் பாடல்களுள் ஒன்றான ஊஞ்சல் பாடல்களும் சிறுவர்களால் பாடப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. “ஆலமிலை போல வயிறு வாடுதேடி தோழி அழகான ஊஞ்சலை ஆறவிடு தோழி” என்னும் பாடல் கூறத்தக்கது. வன்னி மண்ணை ஆண்ட சிற்றரசனான பண்டாரவன்னியனது வாழ்க்கைவரலாற்றை நாடகமாக நடித்துக்காட்டுகின்ற நாடக மரபும் இம் மக்களிடையே நிலவியுள்ளது. வரலாற்றடிப்படையில் வன்னித் தமிழர்களது வீரத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு வரலாற்று நாடகமாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னிச்சமூகத்தின் மண் வாசனை இந் நாவலுடாக வெளிப்பட்டு நிற்றலைக் காணமுடிகிறது. இதற்குச்சிறந்த எடுத்துக்காட்டாக “ மாட்டுப்பட்டிக்குச் சென்ற வினாசியர் நான்கைந்து பசுக்களில் பால் கறந்து வந்து கற்பகத்திடம் கொடுக்கிறார். அடுக்களையில் ஈரவிறகுடன் போராடிக் கொண்டிருந்த மீனாட்சி அடுப்பை மூட்டுவதில் ஒருவாறு வெற்றி கண்டுவிட்டாள். கற்பகம் பால்கலயத்தை தாயிடம் கொடுத்துவிட்டு தனது நாளாந்த பணிகளில் ஈடுபடுகிறாள். வீடு, மால், அனைத்தையும் கூட்டித்தள்ளிவிட்டு வளவு முழுவதும் கூட்டித்துப்பரவு செய்தாள். பலா, மாச் சருகுகளை கூட்டி அள்ளிக்குப்பையைப் புறம்போக்கான இடத்தில் குவித்தாள்.” என ஆசிரியர் வினாசியின் வீடுபற்றி வர்ணிக்கும் போதே அச்சூழலின் மண் வாசனையைப் பதிவு செய்து விடுகிறார். வினாசியர் உமிக்கரியால் பல் துலக்குவதும் கதிர்வேலன் வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் அச்சமூகத்தின் வழமையைக்காட்டி நிற்கின்றது. நாடக மரபுகள், கூத்துமுறமைகள், விளையாட்டுக்கள், பழமொழிகள், உணவுப்பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள் ஆகிய அனைத்து வாழ்வியல் அம்சங்களிலும் ஆசிரியர் வன்னிச்சமூகத்தின் மண்வாசனையைப் பதிவு செய்யத் தவறவில்லை என்றே கூறவேண்டும்.

குறிப்பிட்ட சமுதாயத்திற்கான பேச்சுவழக்கு பயன்பாடுகளையும் கொண்டு இந் நாவல் அமையப் பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது. சீதனபாதனப்பேச்சு, வடிவுசங்கை, இடிச்ச புளிமாதிரி இருக்கிறியள், காத்தைத்தான் குடிக்கோணும், பலிக்கடாவாக்குதல், வேசையாடுதல், தோறை, எளிர்காட்டல், கிட்டகிளலைக்கும், போன்ற சொற்பிரயோகங்கள் வன்னி வாழ் மக்களிடையே காணப்பட்டுள்ளன. இவை சாதாரணமாக அவர்களது பேச்சு வழக்கு சொற்களாகவே அமைந்துள்ளன. எனினும் இன்றைய நிலையில் இவற்றில் சில சொற்பிரயோகங்களை காணமுடிவதில்லை. மேலும் வன்னியில்லா மக்களாலும் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூக மக்களிடையே சில சொற்கள் வழக்கில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தான் கூறவந்த மையக்கருவை அதாவது  வன்னிச்சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வை நாவல் என்ற இலக்கிய வடிவத்தினூடாக கூறியுள்ளமையும் வரலாற்றுச் செய்திகள் சிதைவுபடாத வகையில் நாவலுக்கான புனைவினை மேற்கொண்டுள்ளமையும் வரவேற்கத்தக்கது. சம்பவங்கள் மக்கள் மத்தியில் சென்றடையக்கூடிய வகையில் கதையினைச் சலிப்பின்றி நகர்த்திச்செல்வதும் தேவையான இடங்களில் பழமொழிகள், உவமையணிகள் போன்றவற்றைப் புகுத்தியும் சிறந்த பாத்திரவார்ப்புகளின் ஊடாக கதையினை நகர்த்திச் சென்றுள்ளமையும், காட்சிப்படுத்தல் தன்மையும் ஆசிரியரின் உத்திகளாக அமைவதோடு கதையின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்துள்ளன.

வரலாற்று அறிவியற்துறையில் கல்வெட்டு, செப்பேடு வெளிநாட்டார் குறிப்புக்கள். தொல்பொருட் சான்றுகள் நாணயங்கள் போன்றன ஒருவரலாற்றை எழுத உதவும் சான்றுகளாக எவ்வாறு அமைகின்றனவோ அதேபோல நாட்டாரியல் அம்சங்களும் ஒரு சமூக வரலாற்றை எழுத முக்கிய சான்றாக அமைகின்றன. ஒரு சமூகத்தின் தொன்மை, தொழில், பண்பாடு ஆகியன குறித்த தரவுகளை நாட்டாரியல் மரபுகள் கொண்டுள்ளது. ஓர் இனத்தின்  வரலாறும் வாய்மொழி வழக்காறுகளை உள்ளடக்கிய நாட்டார் வழக்காறும் ஒன்றோடான்று  நெருங்கிய  பிணைப்பைக் கொண்டவை. சுருங்கக் கூறின் இன வரலாற்றின் ஓர் அங்கம் நாட்டார் வழக்காறுதான் என்று கூறவேண்டும்.

ஓர் இனத்தின் வாய்மொழி வழக்காறுகளிலும், சடங்குகளிலும், பழக்கவழக்கங்களிலும், மற்றும் தட்டுமுட்டுச் சாமன்களிலும் அதன் சமூக பண்பாட்டு வரலாற்றுக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இதனடிப்படையிலே மக்கள் வரலாற்று எழுதுகைக்கான முதன்மைச் சான்றாக வாய்மொழி வழக்காறுகளைக் கொள்கின்றனர். அந்த வகையில் கமுஞ்சோலை என்ற நாவல் ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் வன்னியில் நடந்த உண்மைச் சம்பவங்களை கூறி நிற்பதோடு, மக்களது பாரம்பரிய பண்பாட்டம்சங்களை மீட்டி நிற்கின்றதென்றே கூறலாம். கதைப்பாடல்கள், பழமொழிகள், சடங்குகள், உணவுப்பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள், விளையாட்டுக்கள், வைத்திய முறைகள், கூத்துக்கள், நாடக மரபுகள், மரபுக் கதைகள், என்பவற்றை அடிப்படையாகப் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூக வரலாற்றை எழுத முடியும், இதனடிப்படையில் மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு கட்டிக் காக்கப்பட்ட வன்னிப் பாரம்பரிய, பண்பாட்டு வாழ்வியல் வழக்காறுகளைப் பேசி ஓர் சமூக வரலாற்றை இந்நாவல் கட்டமைத்துள்ளது என்றே கூறலாம், நாட்டுப்புறவியல் பார்வையில் இந்நாவலைப் பார்க்க முயலும் எவருமே இதனை ஒரு சமூகவரலாற்று நாவலாகவே கொள்வர். இவற்றினடிப்படையில் கமுகஞ்சோலை என்ற இந்நாவல் ஓர் சமூக வரலாற்று நாவல் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உசாத்துணைகள்
சிவசுப்ரமணியம்ஆ. (20011) அடித்தள மக்கள் வரலாறு. பாவை பப்ளிகேசன் : சென்னை.
சுப்ரமணியம்வே. (2000) கமுகஞ்சோலை. முல்லைவெளியீடு : வவுனியா

kajeepan15@gmail.com

திருமந்திரம் உயிர்நிலையாமை

187 to #191 #187. தொழ அறியாதவர் தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பு இன்றி எம் பெர...